Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

விகடன்

ஃபேஸ்புக் வழியே உணவு ஆர்டர்... பல ஆயிரங்களை இழந்த பெண்கள்... தடுப்பதும், தப்பிப்பதும் எப்படி?

டிஜிட்டல் பேமன்ட்ஸ் சேவையில் 25.5 பில்லியன் பணப்பரிவர்த்தனைகளுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்றொரு தகவல். அதே நேரம், ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும் முனைப்பில் 60,000 ரூபாயை இழந்திருக்கிறார் புனேயைச் சேர்ந்த பெண் ஒருவர் என மற்றொரு தகவல். இரண்டையும் பொருத்திப்பார்த்து இணையவழிப் (Online) பணப்பரிவர்த்தனையே ஆபத்தானது என முடிவு செய்பவர்கள் பலபேர். பொதுவாக ஆன்லைன் மோசடிகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன?!
ஆன்லைன் மோசடிகள்

புனேயைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் உணவு ஆர்டர் செய்வதற்காக உணவகத்தின் மொபைல் எண் ஒன்றைப் பார்த்துள்ளார். உணவு ஆர்டர் செய்வது குறித்து அந்த மொபைல் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த எண்ணின் மறுமுனையில் பேசிய நபர் முன்பணமாக 10,000 ரூபாயும், கிரெடிட் கார்டு குறித்த தகவல்களையும் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜூன் 19 அன்று 10,000 ரூபாயும், ஜூன் 20 அன்று 49,600 ரூபாயும் இவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்துக் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதே போலப் பெங்களூருவிலும் சவிதா ஷர்மா என்ற 58 வயது பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பார்த்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உணவு ஆர்டர் செய்ய, அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த லிங்க்கினை கிளிக் செய்து, தனது வங்கிக் கணக்கு குறித்த தகவல்கள் மற்றும் யாரிடமும் பகிரக் கூடாத பின் நம்பர் (PIN) ஆகியவற்றைப் பகிர்ந்திருக்கிறார். மறு நிமிடமே 49,006 ரூபாய் அவரது கணக்கில் இருந்து திருடப்பட்டிருக்கிறது.

இதே போல் சில வாரங்களுக்கு முன்பு ஹரியானா விஜிலென்சில் ஜெய்வீர் என்பவர் சீஃப் கிளர்க்காக பணிபுரிந்து வந்திருக்கிறார். அவரது வாட்ஸ்அப்பிற்கு புதிய எண் ஒன்றில் இருந்து ஒரு லிங்க் பகிரப்பட்டிருக்கிறது. அந்த லிங்க்கை கிளிக் செய்ததும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 25,000 ரூபாய் திருடப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்தும் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார்.

மேற்கண்ட நிகழ்வுகள் யாவும் பயனர்கள் விழிப்புடன் இல்லாமல் இருந்ததாலேயே நிகழ்ந்திருக்கிறது. வங்கிகள் தங்கள் பயனர்களிடம் இது போன்ற தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் எனத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் இது போலப் பலர் ஆன்லைனில் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது கூட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு KYC-க்காக விபரங்களைக் கேட்பதாகவும், அதைப் போன்ற தனிப்பட்டத் தகவல்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என எஸ்பிஐ வங்கி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. மேலும் அது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் சைபர் க்ரைம் பிரிவிடம் முறையிடவும் கேட்டுக்கொண்டிருக்கிறது எஸ்பிஐ.

(சைபர் க்ரைம் இணையதளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்)

இது போன்ற மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

  • உங்களது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு பெரும்பாலும் மோசடிகள் செய்ய முடியாது. அதனுடன் உங்களது பெயர், கார்டு காலாவதியாகும் தேதி, CVV எண், பின் நம்பர் ஆகிய தகவல்களை யாருடனும் பகிராதீர்கள். கிரெடிட் கார்டு எண்ணைக் கூட யாரிடமும் பகிர வேண்டாம்.

  • வங்கியில் இருந்து பேசுகிறோம் எனக் கூறிக் கொண்டு இது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுவார்கள். ஆனால், வங்கியில் இருந்து அப்படி எந்தத் தகவல்களையும் கேட்க மாட்டோம் என வங்கிகளே வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

  • ஒரு வேளை உண்மையாகவே வங்கியில் இருந்து அழைத்திருக்கலாம் என உங்களுக்குத் தோன்றினால், நேரடியாக வங்கிக்குச் சென்று விசாரித்து விடலாம்.

ஆன்லைன் மோசடிகள்
  • உங்கள் வங்கிக்கணக்கு குறித்த தகவல்களைக் கேட்டு வரும் எந்த ஒரு எஸ்எம்எஸ் மற்றும் இமெயிலுக்கும் பதிலளிக்காதீர்கள்.

  • வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிராதீர்கள். நீங்கள் தவறுதலாக எடுக்க ஸ்கிரீன் ஷாட்டில் உங்கள் வங்கி விபரங்கள் சேர்த்துப் பதிவாகியிருக்கலாம். கவனமாக இருக்க வேண்டும்.

  • தெரியாத நபர்களிடம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டைக் கொடுக்காதீர்கள்.

  • தெரியாத எண் அல்லது மின்னஞ்சலில் இருந்து ஏதேனும் லிங்க் பகிரப்பட்டால் அதனை கிளிக் செய்யதீர்கள்.

  • அவ்வப்போது வங்கிக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பணம் வரவு, செலவு சரியாக இருக்கிறதா, அதில் செலவு செய்த தொகை எல்லாம் நீங்கள் செலவு செய்தது தானா என அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது. இல்லையென்றால் உடனடியாக வங்கியை அணுகுவது நல்லது.

நம் வங்கித் தகவல்கள் மற்றும் தனிப்பட்டத் தகவல்களை யாரிடமும் பகிராமல் பாதுகாப்பாக வைத்திருந்தாலே பெரும்பாலான மோசடிகளைத் தவிர்த்து விடலாம்.


from விகடன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib