ஸ்மார்ட்போன்களில் மற்ற பாகங்கள் மேம்படுத்தப்பட்ட அளவு பேட்டரிக்கள் மேம்படுத்தப்படவில்லை. பேட்டரிக்களைப் பொறுத்தவரை நீடித்து நிலைக்கும் பேட்டரிக்களை அளிப்பதில் எப்போதும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பிரச்னை இருந்துதான் வருகிறது. எனவே, பேட்டரிக்களை மேம்படுத்துவதை அடுத்த இடத்தில் வைத்துவிட்டு, சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தொடங்கிவிட்டன ஸ்மார்ட் போன் நிறுவனங்கள்.
வேகமாகவோ அல்லது எளிதாகவோ சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சார்ஜிங் தொழில்நுட்பம் என்றால் ஷாவ்மி (Xiaomi) தான் என நினைக்க வைக்கும் அளவு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்தச் செய்தியும் ஷாவ்மியின் புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை பற்றியதுதான்.
சீனாவில் அறிவுசார் சொத்துகளை நிர்வகிக்கும் China National Intellectual Property Administration (CNIPA)-யிடம் ஒலியை வைத்து மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் வகையிலான புதிய தொழில்நுட்பத்துக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறது ஷாவ்மி. ஒலி அலைகளால் ஏற்படும் அதிர்வுகளை மின்சாரமாக மாற்றி பின்னர், அதனைக் கொண்டு மின்னணு சாதனங்கள் சார்ஜ் செய்யும் வகையில் அதன் செயல்பாடு இருக்கும் எனத் தெரிகிறது. சார்ஜிங்கில் புதிய தொழில்நுட்பத்தை ஷாவ்மி செயல்படுத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த ஜனவரி மாதமும் 'ஏர் சார்ஜிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தையும் ஷாவ்மி அறிமுகப்படுத்தியிருந்தது. பாஸ்ட் சார்ஜிங்கில் 200W கொண்டு 4000mAh பேட்டரியை எட்டு நிமிடத்தில் சார்ஜ் செய்து காட்டி அசத்தியிருந்தது ஷாவ்மி.
Also Read: இந்தியாவில் அதிகரித்த ஸ்மார்ட்போன் விற்பனை... ஷாவ்மி, சாம்சங், விவோ - எந்த பிராண்ட் டாப்?!
200W கொண்டு 4000 mAh பேட்டரியைக் கொண்ட, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Mi 11 Pro, 44 நொடிகளில் 10 சதவிகிதமும், 3 நிமிடத்தில் 50 சதவிகிதமும், 8 நிமிடத்தில் முழுவதுமாகவும் சார்ஜ் செய்ய முடிந்தது. அதே போல் 120W வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுடபம் மூலம், அதே 4000 mAh பேட்டரியை 15 நிமிடத்தில் சார்ஜ் செய்து காட்டியது ஷாவ்மி. தற்போது ஒலியை வைத்து சார்ஜ் செய்யும் இந்த புதிய தொழில்நுட்பத்தையும் விரைவில் ஷாவ்மி அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடவே 200W சார்ஜிங் வசதி கொண்ட சாதனங்களையும் சந்தையில் அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருக்கிறது.
from விகடன்


No comments:
Post a Comment